மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான உலகளாவிய முஸ்லிம் எய்ட் மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்தியது ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட்!

Date:

ஐக்கிய ராஜ்ஜியத்தைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமானச் செயற்பாடுகளை சுய திறன் மதிப்பீடு செய்வதற்கான உலகளாவிய மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமாகியது.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சர்வதேச நிகழ்வில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதானிகள் உட்பட முஸ்லிம் எய்டின் மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான், சோமாலியா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் எய்டின் இலங்கைக்கான பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க,

இலங்கையின் அபிவிருத்திக்காக முஸ்லிம் எய்ட் வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டியதோடு சரியான தருணத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலைகள் மற்றும் அனர்த்தங்களைக் குறைப்பது தொடர்பில் நிறுவனங்கள் இணைந்து செயற்பட முடியுமான பகுதிகளை எடுத்துக் காட்டினார்.

ஒவ்வொரு நாட்டினதும் தேவைக்கேற்ற வகையில் பிராந்திய நாடுகள் தமது அனுபவங்களையும் பாடங்களையும் சிறந்த செயன்முறைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜீவ விமலகுணரத்ன உரையாற்றும் போது முஸ்லிம் எய்டைப் பாராட்டியதோடு நாட்டில் உதவி தேவைப்படும் மக்களுக்காக அது தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் ஆரம்பக் கல்வி முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்ட அவர் முஸ்லிம் எய்ட் போன்ற நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் வகைகூறும் வகையிலும் செயற்படும் வகையில் இந்நிறுவனங்களுடன் செயலகம் நெருங்கிச் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசிய முஸ்லிம் எய்டின் நல்லெண்ணத் தூதுவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளருமான அஷ்.அர்கம் நூரமித், பல்வேறு மதத்தினரையும் இணைக்கும் வகையில் முஸ்லிம் எய்டின் மனிதாபிமான சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைபெறும் விதத்தை விளக்கிப் பேசினார்.

முஸ்லிம் எய்டின் 33 ஆண்டுகால வரலாற்றையும் உலகளாவிய மனிதாபிமான மேம்பாட்டுக்கான அதன் வகிபாகத்தையும் விளக்கிய முஸ்லிம் எய்டின் உலகளாவிய நிகழ்ச்சித் திட்டங்களின் முகாமையாளர் சாம் குக் முஸ்லிம் எய்டின் செயற்திட்டங்களின் விரிவாக்கம் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அனர்த்த முகாமைத்துவத்துக்கான ஆசிய பசிபிக் கூட்டமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் பிர்ஸான் ஹாஷிம், முஸ்லிம் எய்ட் யூகேயின் மனிதாபிமானத் திட்டங்களின் முகாமையாளர் ஆசிப் ஷஹாப் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

Popular

More like this
Related

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...