ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“என்னுடன் இணைந்து பயணித்திருந்த அசாத் மௌலானா, வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளதால், அவரது புகலிட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
எமது அமைப்பில் இயங்க முடியாது, தமது பிணக்குகளுக்கு தீர்வுகாண குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வேண்டுமென கூறி அவர் விலகிச் சென்று ஒரு வருட காலம் கடந்துள்ளது.
செனல்-4 வெளியிட்டுள்ள இந்த காணொளி பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
செனல்-4 தொலைக்காட்சி கடந்த காலத்தில் எமது நாட்டுக்கு என்ன செய்தது என நன்றாகத் தெரியும்.
அந்த ஊடகத்தில் வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. கடந்த காலத்தில் பல ஊடகங்களால் நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த உயரிய சபையில் எனது பெயரை பயன்படுத்தியதுடன், கருத்துகளையும் வெளியிட்டிருந்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனை பாரிய பிரச்சினையாக தோற்றுவித்திருந்தனர்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல்களால் நாட்டில் இரத்த ஆறு ஓடியதுடன், கிழக்கு மாகாண மக்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்புதான் மேற்கொண்டதாக அந்த அமைப்பின் மறைந்த தலைவர் அல் பக்தாதி தெரிவித்திருந்தார். ஐ.எஸ். அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான “அமாத்“ என்ற இணையத்தளத்திலும் தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
எதற்காக செய்தார்கள், என்ன நோக்கத்துக்காக செய்தார்கள் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் சம்பவங்கள், விசாரணைகள் தொடர்பில் அனைவருக்கும் தெரியும்.
குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்காதுள்ள சந்தர்ப்பத்தில் அசாத் மௌலானா, இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப பார்க்கிறார்.
இவர்கள் மதத்தின் பெயரால் உயிரிழக்க ஊக்குவித்த மத நிறுவனங்களும், அரசியல் சக்திகளும், சர்வதேச சக்திகளும் உள்ளன. இதனை காப்பாற்ற அசாத் மௌலான முயற்சிகளை எடுக்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
கிறிஸ்தவ மக்களை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ள இந்த சபை, ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியை வைத்து வேறு திசைக்கு திருப்ப பார்க்கின்றனர்.
ஐ.எஸ். அமைப்பு மிகவும் ஒரு கடுமையான அமைப்பாகும். அதிகளவான மூளைசாளிகளை கொண்ட அமைப்பாகும். சிரியா, ஈராக் போன்ற பகுதிகளில் போர்களை முன்னெடுத்து தோல்விடைந்த அமைப்பாகும்.
அவ்வாறு இருக்கும் சூழலில் சபையில் இருப்பவர்கள் உள்நாட்டில் ஒரு கருத்தையும் சர்வதேசத்துக்கு ஒரு கருத்தையும் வெளியிடுவது குழப்பகரமான நிலைமைகளை தோற்றுவிக்கும். மீண்டுமொரு அச்சுறுத்தலான சந்தர்ப்பத்தை உருவாக்க பார்க்கின்றார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.
கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பொய்யான விடயங்களை பேசிக்கொண்டிருக்கக் கூடாது. இவை மேலும் பிரச்சினைகளைதான் ஏற்படுத்தும்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் பதவிகளை பறிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். நான் சிறைசாலையில் இருந்தேன். சிறைச்சாலையில் இருந்து இவ்வாறான விடயங்களை செய்ய முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.