முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் உள்ள தமிழ்ப் பிழை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையிலேயே பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது “குா்டுடுபுா்யு ருா்ஜபுகு்ஷ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அறிக்கை வெளியான பின்னர் பலரும் இந்த விடயத்தை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்ட நிலையில், தற்போது இந்த விடயம் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.
யுத்தத்தின்போது இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணப்படுகிறார்.
அவர் தன்னுடைய கடிதத் தலைப்பில் தன்னுடைய பெயர் மூன்று மொழிகளிலும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கூட கவனிக்காமை, தமிழர்கள் மீதான அவரது அக்கறையின்மை அல்லது வெறுப்பினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் முன்னாள் தலைவராக, அவர் எவ்வாறு, தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் விடயம் சார்ந்து அவர் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதுமான அவரது பொறுப்பற்ற அல்லது அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக குறித்த செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.