களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கெஸ்பேவ, ஹொன்னந்தர சர்வோதய மாவத்தையைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுநாள் அவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில் குழந்தைகள் குறைமாத குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு கருத்து தெரிவித்த உயிரிழந்த குழந்தைகளின் தாயார்,
“ மகனை இழந்த போது, உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள், மகள் நலமாக இருக்கிறாள், அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள்,
நேற்று மதியம் 2 மணிக்கு, குழந்தை நலமாக உள்ளது, குழந்தையின் எடை நன்றாக உள்ளது, அவர்கள் 34 வாரங்கள் வரை வைத்திருக்கிறோம் இல்லையெனில் கொடுக்கலாம் என தெரிவித்தனர்.
என் வார்டில் உள்ளவர்களுக்கு கூட தெரியாது என்னை அழைத்து உட்காரச் சொன்னார்கள்.அப்போது குழந்தை எங்கே என்று கேட்டேன்.
குழந்தைக்கு திடீரென காய்ச்சல் வந்தது. இரத்தம் குறைந்தது. அவருடைய இதயம் திடீரென நின்று விட்டதாகச் தெரிவித்தார்கள்.
அவருக்கு உடம்பில் எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும், குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகவே அவர்கள் எப்போதும் தெரிவித்தார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான முறைப்பாடு தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.