அரசாங்கத்துக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும் ஏனைய சில தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன.
“சுகாதார சேவைகள் ஆபத்தில்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் உறுப்பினர் வைத்தியர் ஜெயந்த பண்டார தெரிவித்தார்.
“தேசிய விரோத தினமாக 22ஆம் திகதியை நாம் பிரகடனப்படுத்துவதுடன், அனைத்து வைத்தியசாலைகள் முன்னிலையிலும் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாட்டின் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாக அவர் கூறியதுடன், எமது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.
நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளன என நாட்டு மக்களுக்குத் தெரியும். அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், மக்களின் சுகாதாரம் தொடர்பில் அவர்களுக்கு துளியளவும் அக்கறையில்லை.
அரசியல்வாதிகளுக்கு இந்த வைத்தியசாலை கட்டமைப்பு அவசியமில்லாவிடினும் நாட்டு மக்களுக்கும் இது அவசியமாகும். ஆகவே, நாளை மறுதினம் 22ஆம் திகதி அரசாங்கத்துக்கு மீண்டுமொருமுறை தெளிவாக இந்த விடயத்தை உணர்த்த உள்ளோம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.