பலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடிக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தை மூலம் ஆராயப்பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்பாவி மனித உயிர்களை விலையாக வைத்து இந்த நிலைமையை தீர்க்க முடியாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
பலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்துள்ளதுடன் பல மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இன, மத வேறுபாடின்றி மனித குலத்தினரிடையே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளன.
மனிதகுலத்தின் வரலாறு நெடுகிலும், ஒடுக்குமுறையும் அநீதியும் எந்த விதமான நலனையும் மனிதகுலத்திற்குப் பெற்றுத் தருவதில் வெற்றிபெறவில்லை. மாறாக அது தேசங்களை மேலும் அழிவுக்கே இட்டுச் சென்றுள்ளது என்பது தெளிவாகிறது.
இந்தவகையில், பலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடிக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தை மூலம் ஆராயப்பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்பாவி மனித உயிர்களை விலையாக வைத்து இந்த நிலைமையை தீர்க்க முடியாது.
பாகுபாட்டுக்கும் வெறுப்புக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் பொறுப்பை உலகளாவிய சமூகம் கொண்டுள்ளது. அந்தவகையில் இந்த பிரச்சினையை ஒரு பக்கச்சார்பற்ற மனிதாபிமான முறையில் அணுகி நீதி வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாம் நமது அன்புக்குரிய நபி முஹம்மது (ஸல்) அவர்களால் வழிகாட்டப்பட்டதன்படி மனிதகுலத்தின் நலனுக்காக குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நற்கூலி வழங்குவானாக. மனித குலத்திற்கு நிலையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அருள்வானாக.