நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 12 மாவட்டங்களை சேர்ந்த 34,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8,807 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்திலே அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மலையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.