அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளுக்குமான வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் மற்றும் காஸாவில் நிகழ்த்தப்படுகின்ற மனிதாபிமானமற்ற இனப்படுகொலைகளாலும் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாலும் ஒட்டுமொத்தமாக 4000 க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோர் படுகாயமடைந்திருப்பதையும் நாம் அறிவோம். அதில் பெரும்பான்மையானவர்கள், குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் ஆவார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளின் போது மரணிக்கும் எமது சகோதரர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துவதும் இஸ்லாமிய வழிகாட்டலாகும்.
‘மறைவான (G-ஙாஇப்) ஜனாஸாத் தொழுகையை, ஒருவர் ஒரு தினத்தில் அன்று மரணித்தவர்களுக்காக அல்லது அவ்வருடம் மரணித்தவர்களுக்காக தொழுவது ஸுன்னத்தாகும்’ என ஷாபிஈ மத்ஹபுடைய மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே இத்தாக்குதலில் மரணித்தவர்களுக்காக மறைவான (G-ஙாஇப்) ஜனாஸா தொழுகை நடாத்தி, அதனைத் தொடர்ந்து பலஸ்தீனில் அமைதி நிலவவும் முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படவும் வல்ல அல்லாஹ்விடம் உதவி வேண்டி அனைவரும் ஒன்றுசேர்ந்து துஆ பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.