அரசியல்வாதிகள் இன முரண்பாடுகளை தூண்டுவதை தொடர்ந்தால் பொருளாதார மீட்சியைப் பற்றி இலங்கை கனவு கூடக் காணமுடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பு விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிறன்று (29) நடைபெற்ற இந்த வைபவத்தில் பலஸ்தீன், மலேசிய நாடுகளின் தூதுவர்களும் எகிப்து, இந்துனீசியா, நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஏ.எச்.எம். பௌஸி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருடன் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சம்மேளனத்தில் தனது பதவிக் காலத்தை இந்த அமர்வுடன் நிறைவு செய்கின்ற சம்மேளனத்தின் தேசியத் தலைவர் லுக்மான் சஹாப்தீனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமநாயக்க விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதனுடைய தேசியத் தலைவர் கே.எம். காதர் மொஹிதீன் சார்பாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களும் லோக்சபாவின் தமிழ்நாடு உறுப்பினர் கே. நவாஸ்கனி அவர்களும் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்றனர்.
நாட்டின் பல மாவட்டங்களிலும் கிளைகளைப் பரப்பிச் செயற்படுகின்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் மாவட்டக் கிளைகளில் இருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இளையோர்கள் அடையாளம் கண்ட தமது பிரதேசத்துக்கான பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தமை பார்வையாளர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது. அனுராதபுர மாவட்டக் கிளையிலிருந்து யானை – மனிதன் மோதல் பற்றியும் மன்னார் மாவட்டத்திலிருந்து மண்ணகழ்வு சாந்த சூழல் பிரச்சினையும் பற்றியும், புத்தளம் மாவட்டத்திலிருந்து போதைப் பொருள்பற்றியும் களுத்துறை மாவட்டத்திலிருந்து கல்வியில் ஆண்மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பது பற்றியபிரச்சினையின் தாக்கமும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், அவர்களது மக்கள் பணிக்காக விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவர்களான தல்கஸ்பிடிய சிரேஷ்ட ஊடகவியாலாளர் என்.எம்.அமீன், உடுதெனிய சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், அக்கரைப்பற்று எம்.ஐ. உதுமா லெப்பை, பொத்துஹர கலாநிதி பீ.எம். பாரூக் ஆகியோரும் சம்மேளனத்தின் மூலம் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
களுத்துறை, குருநாகலை, கண்டி, புத்தளம், அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ திறன்விருத்தி பயிற்சி முகாம்களில் பங்குபற்றியவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 750 பேருக்கான சான்றிதழ்களும் மாநாட்டின் போது வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆண்டுப் பூர்த்தியையொட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் இந்தப் பொன்விழா மாநாட்டில் வழங்கப்பட்டன.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொன்விழா மாநாட்டையொட்டி தபால் அமைச்சின் முத்திரை வெளியீட்டுப் பணியகம் ரூபா.25 பெறுமதியான விஷேட ஞாபகார்த்த முத்திரியையும் ஞாபகார்த்த கடித உறையையும் வெளியிட்டு வைத்தது.
நினைவு முத்திரை மற்றும் கடித உறையின் முதல் பிரதி சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களிடம் தபால் மாஅதிபர் சத்குமார அவர்களினால் கையளிக்கப்பட்டது.
பொன்விழாவை முன்னிட்டு சம்மேளனத்தின் உதயக்கீற்று விஷேட ஞாபகார்த்த மலரும் சஞ்சிகையின் ஆசிரியர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸினால் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டின் விஷேட நிகழ்வாக புதிய நிர்வாகக்குழு தொிவும் இடம்பெற்றது. தேசிய தலைவர் ஷாம் நவாஸ் அவர்கள் தலைமையிலான புதிய நிர்வாகக்குழு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது.