ஜம்இய்யதுல் மஷாரீயில் ஹைரிய்யாஹ் அல் இஸ்லாமிய்யாஹ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌலூத் நபி நிகழ்வுகள் புத்தளத்தில் நேற்றுமுன்தினம் (10)
மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றன.
புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷெய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர்.
இவர்களுடன் கொழும்பு இமாம் அல் அஷ்அரீ அரபுக் கலாபீட கஸீதா குழுவினரும் இணைந்து கஸீதா பாடினர்.
மேலும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மாஜித் பஹ்ஜீ மற்றும் அஷ்ஷைய்க் ஸப்லான் அஷ்அரீ ஆகியோரின் விஷேட உரைகளும் இடம்பெற்றன.
ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் நதீர் இல்மீ அவர்களின் ஜம்இய்யாவின் மன்ஹஜ் பற்றிய தெளிவுரையும் இடம்பெற்றது. இதில் அஷ்அரிய்யாக்களின் அகீதாவைப் பாதுகாக்க நாம் முனைப்புடன் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுமென்பதின் அவசியம் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தளத்தின் அரபுக் கல்லூரி அதிபர்கள், உஸ்தாத்மார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பேஷ் இமாம்கள், இஸ்லாமிய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்புற நிறைவேற்ற பங்காற்றிய ஊர்மக்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
(எம்.யூ.எம்.சனூன்)