தடுப்பூசி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அரசாங்க மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சாலமன், கணக்காளர் நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய மருந்தாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்ட நான்கு அதிகாரிகள் நேற்று (20) பிற்பகல் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, போலியான ஆவணங்களை தயாரித்து இலங்கைக்கு குறித்த தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அதனுடன் தொடர்புபட்ட நான்கு சுகாதார அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த நிறுவனம் மூலம் மற்றுமொரு புற்றுநோய் மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி மருந்து 2000 நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.