இஸ்ரேல் – காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும் பணயக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவில்லை என இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசு முதன்முறையாக காஸாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் (23) பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் நாளை வரையிலும் காஸாவில் ஹமாஸ் போராளிகளிடம் சிக்கியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வாய்ப்பு இல்லை.
“பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பணயக் கைதிகளின் விடுவிப்பு இரு தரப்பிலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆரம்பிக்கப்படும்” என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.