தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ்மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக (SDIG) கடமையாற்றிய தேஷபந்து தென்னகோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பதில் பொலிஸ் மா அதிபராக இன்று பதவி உயர்த்தப்பட்டார்.
இதன்படி, அவர் மூன்று மாதங்களுக்கு தற்காலிக பதில் பொலிஸ் மா அதிபராக பதவியில் இருப்பார்.
இந்நிலையில், தமது நியமனத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன்,
‘‘முதல் கட்டமாக தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் குற்றங்களை ஒடுக்குவதற்கும், ஒழுங்கப்பட்டு முன்னெடுக்கப்படும் குற்றங்களை தடுப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்படும்.‘‘ என்றார்.