இலங்கையில் இருந்து உடனடியாக 10,000 தொழிலாளர்களை விவசாயத் துறைக்கு உள்ளீர்ப்பதற்கான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்தாகியுள்ளது.
இஸ்ரேலிலுள்ள இலங்கைக்கான தூதுவர் நிமல் பண்டாரநாயக்க மற்றும் இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோசே ஆபல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கென 5000 வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை இஸ்ரேலியக் கம்பனிகளுக்கு கடந்த வாரம் அனுமதியளித்திருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் 10,000 பேரை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு முன்வந்துள்ளது.
நடந்து கொண்டிருக்கும் போரினால் இஸ்ரேலின் விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய ஊடகம், விவசாயத்துறையில் வேலை செய்த 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 8000 பேர் வரை இதுவரை இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல விவசாயத்துறையில் பணிபுரிந்த 20,000 பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் வகையில் 10,000 தொழிலாளர்களை அடுத்த வாரமளவில் அனுப்பி வைப்பதற்கு இலங்கை இணங்கியுள்ளது.
இஸ்ரேலில் ஏற்கனவே 4500 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பராமரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
Source: Globes