கஹட்டோவிட்டவில் இயங்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் ஷாபி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிலையத்தின் தலைவரும் பஹன ஊடக வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் கபூரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் முகாமைத்துவ நிபுணர் முன்னாள் முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொருளாளரும், மலேசியா இஸ்லாமிய கலைகள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி அஸ்வர் அஸாஹிம் இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக நிட்டம்புவ புனித அந்தோனியர் தேவாலயத்தின் அருட் தந்தை கிருள் ஜயநாத், திஹாரிய மஸ்ஜிதுல் இப்றாஹிமிய்யாவின் பிரதம ஆலோசகர் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர், ருகுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் முன்னாள் உதவி ஆணையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.அப்துர் ரஹ்மான், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய ஆலோசகருமான அஹமத் முனவ்வர் மற்றும் குவைட் தூதரக சிரேஷ்ட அதிகாரி அஷ்ஷெய்க் பிர்தௌஸி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கிராஅத் மற்றும் வரவேற்பு கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கஸீதா உள்ளிட்ட இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்வின் அடுத்த அம்சமாக விசேட அதிதியாகக் கலந்துகொண்ட நிட்டம்புவ புனித அந்தோனியர் தேவாலயத்தின் அருட் தந்தை கிருள் ஜயநாத், அவர்கள் உரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் அடுத்த பகுதியாக மாணவர்களின் குர்ஆனிய கதை நாடகம், அரபுப்பாடல், கவிதை, சிறுவர் பாடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொருளாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் அவர்கள் சிறப்புரையை நிகழ்த்தினார்.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப் , ருகுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்க ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கடந்த ரமழான் மாதத்தில் நடைபெற்ற வருடாந்த அல்குர்ஆன் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பணப் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதி நிகழ்வாக மேலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அஷ்ஷெய்க் எம். முஹிடீன் இஸஷ்லாஹி அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.