சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை நினைவு கூரும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதியை பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல நிகழ்வுகள் ஏற்பர்டு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் கொழும்பில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
‘பலஸ்தீனுக்கு நீதி’ எனும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் அரங்கில் நாளை (29) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில் (Asia pacific coordinator of the boycott, divestment, sanctions) புறக்கணிப்பு, ஒதுக்கி வைத்தல், பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றின் ஆசிய பசிபிக் ஒருங்கிணைப்பாளர் அபூர்வ கௌதம் உரை நிகழ்த்துவார்.
மேலும் இக்கருத்தரங்கில் ஜக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், தூதரக இராஜதந்திரிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு நாளை கண்டியிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கண்டி சிட்டி சென்டரில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு போரம் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு, குழுக் கலந்துரையாடல்கள், சிம்போசியம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலும் சிம்போசியம் மற்றும் கண்காட்சி நிகழ்வுகள் நாளை (29 )தொடக்கம் டிசம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.