புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில், விம்பிள்டன் கழகத்தின் முன்னாள் வீரர் மர்ஹூம் ஜனாப் ஞாபகார்த்தமாக புத்தளம் நகரில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் லிவர்பூல் கழகம் வெற்றி வாகை சூடியது.
புத்தளம் உதைபந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 12 அணிகளுக்கு இடையிலான அணிக்கு ஒன்பது பேர் கொண்ட இந்த உதைபந்தாட்டத் தொடர் கிறிஸ்மஸ் தினத்தன்று (25) நேற்று புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
புத்தளம் உதைபந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அந்த வகையில் லிவர்பூல், த்ரீ ஸ்டார்ஸ், யுனைட்டட் மற்றும் போல்டன் அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறிய அணிகள் ஆகும்.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் த்ரீ ஸ்டார் கழகங்கள் போட்டியிட்டதில் லிவர்பூல் கழகம் 01 : 00 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டியில் யுனைட்டட் கழகம் போல்டன் அணியை 01 : 00 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்ட இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தலா 01 : 01 என்ற கோல் கணக்கில் போட்டி சம நிலையில் முடிவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி முறையில் லிவர்பூல் கழகம் 03: 02 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த சுற்றுத் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக போல்டன் அணியை சேர்ந்த முனாசிர் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் சிறந்த வீரராக லிவர்பூல் கழகத்தின் பவாஸ் தெரிவு செய்யப்பட்டார்.