தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் எனும் சிறிய கடற்கரை நகரம் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஊராக மாறியிருக்கிறது.
காரணம் அங்கு ஒரே நாளில் பெய்துள்ள வரலாறு காணாத மழை. அங்கு 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை போன்ற ஒரு பெருநகரில் 2 நாட்களில் பெய்த 50 செ.மீ மழையே பல வாரங்களுக்கு நகரத்தை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்த போது, காயல்பட்டினம் எனும் சிறிய ஊரில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மொத்த மழை 24 மணிநேரத்தில் பெய்ததால் அந்த ஊரின் நிலை என்னவாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
காயல்பட்டினமானது கடலுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய நகரம்தான். ஆனால் 60க்கும் மேற்பட்ட பெரிய குளங்களைக் கொண்ட நகரமாக உருவாகி இருந்தது.
இன்னொரு பக்கம் காயல்பட்டினத்தின் வீடுகள் கட்டமைப்பானது பெருமளவு நீர் வெளியேறக் கூடிய சாத்தியமற்ற கட்டமைப்புகளையும் கொண்டது.
அண்மைக்காலமாக குளங்களை காவு கொண்ட இதர பகுதிகளைப் போல காயல்பட்டினமும் உருமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஒரே நாளில் 93 செ.மீ மழை வெளுத்தெடுத்து காயல்பட்டினத்தை கதிகலங்க வைத்துள்ளது.
காயல்பட்டினத்தில் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் மூழ்கிக் கிடக்கின்றன. என்னதான் குளங்கள் நிரம்பி வழிந்தாலும் என்னதான் கடலுக்கு அருகே இருந்தாலும் குடியிருப்புகள் அத்தனையும் பெருமழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காயல்பட்டினத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் புன்னைக்காயல் உள்ளது. இங்குதான் தற்போது 1 லட்சம் கன அடிநீரோடு பாய்ந்து வரும் தாமிரபரணி நதி கடலில் கலக்கிறது.
இதேவேளை காயல்பட்டினத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சுலைமான் கூறுகையில்,
“ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து சமுதாய மக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முடிந்த வரை அவர்களுக்கான உணவை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். மருத்துவ வசதிகளுக்காக ஆம்புலன்சும் உள்ளது. ஆனால் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு செல்ல வாகன வசதிகள் இல்லை.
விடாது கொட்டி வரும் மழை சற்று நின்றால் தான், உண்மையான பாதிப்புகள் தெரியவரும். எந்த உயிர் பலியும் இருக்காது என நம்புகிறோம். மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தால் நிலைமை மோசமாகும் அபாயமுள்ளது. உணவுப் பற்றாக்குறையும் உள்ளது.
காயல்பட்டினம் சிறிய ஊர் தான் என்றாலும், இங்கு பெய்துள்ள அதிகளவு மழையைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.