இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமை புரிந்து தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்றினை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று முன்தினம் (19) இந்நிகழ்வு நடைபெற்றது.
சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கான ஞாபகார்த்தச் சின்னத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸுடன், பொதுச் செயலாளர் எம் அஜ்வதீன், முன்னாள் தலைவர்களான லுக்மான் ஷஹாப்தீன், பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என் எம் ஷஹீட், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அரை நூற்றாண்டாக இலங்கையில் இயங்கி வரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் பல்வேறு தரப்புகளுடனும் இராஜதந்திர உறவுகளை பலகாலமாக மேம்படுத்தி வருகிறது.