கடந்த 2015ஐ போலவே, இம்முறையும் சென்னையின் சாலைகளில் கடல் போல தேங்கிகிடக்கும் வெள்ளநீரை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் சென்னை மக்கள்.
இப்படியான நெருக்கடி நேரத்தில், சென்னை பூந்தமல்லி பள்ளிவாசல், ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது.
இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது. நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், அந்த நிவாரண முகாம்களுக்கு செல்வதற்குகூட, முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், இஸ்லாமியர்கள் செய்த காரியம், புல்லரிக்க வைத்துவிட்டது.
அதுவும் பூந்தமல்லி பள்ளிவாசல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில்,
“அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் ஜார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம்.
மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளிவாசலில் தங்கலாம். “அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல” ”
என்ற இந்த அறிவிப்பானது, காண்போரை நெகிழ வைத்தது..
இப்படி ஒரு அறிவிப்பை பார்த்ததுமே, தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுமே, மசூதிக்குள் திரண்டனர்.
அவர்களுக்கு வயிறார உணவு தரப்பட்டது. இதேபோல் சென்னை பாலவாக்கம் மசூதியிலும் அனைத்து சமுதாய மக்கள் தங்க வரலாம் என்று அழைப்பு விடுத்திருந்தனர்.
மேலும், அனைத்து சமுதாய மக்களுக்கும் இன்று உணவு ஏற்பாடு நடக்கிறது, 150 கிலோ அரிசி கொண்டு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும்.. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்ற பதிவுகளும் பறந்தன.
இந்த சம்பவங்கள் எல்லாமே மனித மனங்களை நெகிழ செய்து வருகிறது. மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஒவ்வொருமுறையும் நமக்கு உணர்த்திவிட்டு செல்கின்றன.
எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதநேயமும், ஈரம் கசியும் உள்ளங்களும் இங்கு இருக்கும்வரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த “சகோதர உறவுகள்” நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன.