இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கல்வித் துறை கடுமையாகப் பாதித்துள்ளதாக, சனத்தொகை மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் 54.9 வீதம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடை நிறுத்தியவர்கள் 2.1 வீதம் உள்ளதாகவும், திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே, மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் கல்வியில் நகரப் பகுதியில் 54.2 வீதமும், கிராமப் புறத்தில் 55.1 வீதமும், பெருந்தோட்டப் பகுதியில் 55.1 வீதமும் தடைப்பட்டுள்ளது.
பாடசாலைப் பொருட்களை வாங்காமல் இருந்ததற்காக, 53.2 சத வீதம், சீருடை வாங்காமல் அல்லது குறைக்காமல் இருந்ததற்காக 44.0 சத வீதம், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்ததற்காக 40.6 சத வீதம் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டில் 17.5 வீதமான பிள்ளைகள் கல்விப் பாடங்களை மட்டுப்படுத்தியுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடை நிறுத்தியவர்களின் வீதம் 2.1 வீதமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இது ‘2023 பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப ஆய்வு’ என்று பெயரிடப்பட்டுள்ளதோடு, கல்வி, வேலை வாய்ப்பு, தனி நபர் வருமானம், குடும்ப வருமானம் மற்றும் செலவு, உடல் நலம் உள்ளிட்ட குடும்ப அலகுகளின் கடன் ஆகிய ஏழு தலைப்புக்களின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.