குளிக்கச் சென்ற சிறுவனின் உயிரை எடுத்த முதலை: களனி கங்கையில் பதற வைத்த சம்பவம்!

Date:

கடுவெல – வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தை பகுதியில் களனி கங்கைக்கு நீராடச் சென்ற ஒன்பது வயது சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

9 வயதுடைய டிஸ்ன பெரேரா என்ற சிறுவனையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது. குறித்த சிறுவன், தனது பாட்டியுடன் குளிப்பதற்காக களனி கங்கைக்கு சென்றுள்ளார்.

பாட்டி துணி துவைக்கும் வரை சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென முதலை வந்து சிறுவனை கௌவிக்கொண்டு போயுள்ளதாகவும் பாட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடுவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பலமுறை அந்த முதலை ஆற்றில் மேல் பரப்பிற்கு வந்து சென்றுள்ளதையும் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுவனின் பாட்டி தெரிவிக்கையில்,

“நாங்கள் கங்கைக்கு துணி துவைத்துவிட்டு குளிப்பதற்காக வந்தோம். இங்கே நாங்கள் மட்டுமல்ல ஒரு அம்மாவும் அவரது மகளும் குளித்துக்கொண்டிருந்தனர்.

அந்த அம்மாவின் மகளும் எனது பேரனும் விளையாடிக்கொண்டே நீராடினர். நாங்கள் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது பாட்டி என்னை குளிப்பாட்டி விடுங்கள் என சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. வார்த்தைகளால் கூற முடியாத அளவு மிகப்பெரிய முதலையொன்று திடீரென எனது பேரனை இழுத்துச் சென்றது.

அப்போது, எனது பேரன் சத்தமாக “பாட்டி“ என கத்தினார்…கண்மூடி திறக்கும் முன் இந்த சம்பவம் முடிந்துவிட்டது. என்னால் இதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக இந்த கங்கையில் முதலையை வளர்த்து வருகின்றார்கள். ஆனால், இந்த முதலையால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களாகிய நாங்கள் தான்…

இவர்களுக்கு மனிதாபிமானமே இல்லையா?… நாங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு கஷ்டப்படுவது? என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற பொதுமக்களும் அந்த முதலை சுமார் 8 அடி நீளமுடையது என தெரிவித்துள்ளனர். ஐந்து தடவைக்கு மேலாக சிறுவனை வாயில் கௌவிக்கொண்டு சுற்றித்திரிந்ததாகவும் ஆறாவது தடவை மேலே வரும் போது சிறுவன் முதலையின் வாயில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் படகு மூலமான தேடுதலில் சிறுவனின் எச்சங்கள் கூட கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் தன்னுடைய சகோதரனின் பிறந்தநாளை கொண்டாட தயாராக இருந்த நிலையில், இவ்வானதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளமையானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...