ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதற்கமைய இன்று மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
பின்னர் மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.
நாளை 5 ஆம் திகதி காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்கிறார்.
நாளை மறுதினம் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.
அதனை தொடர்ந்து அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கக் கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளது என்று நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.