புத்தாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (2) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறைக்கு வரி விதிக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வலியுறுத்தினார்.
“பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.”
அனைத்து பாடசாலை உபகரணங்களுக்கும் வற் வரி விதிக்கப்படுவதால் மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
“பெற்றோருக்கு சமையல் எரிவாயுவிலிருந்து கொள்வனவு செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 18 வீத வரியை விதித்து பிள்ளைகளின் அப்பியாசப் கொப்பிகள் முதல் அனைத்திற்கும் 18 வீத வரியை விதித்து பாதணி, முதல் புத்தகப் பை வரை வரியை விதித்து போக்குவரத்திற்கும் கட்டணத்தை அதிகரித்த பின்னர் எப்படி வாழ்வது??”
நாட்டில் வறிய பிள்ளைகளின் கல்வியை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமா என தொழிற்சங்க தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அரசாங்கத்திற்கு கல்வி அமைப்பை நடத்த விரும்புகிறதா? அல்லாவிடின் இந்த நாட்டின் கல்வி முறைமையில் சாதகமற்ற நிலையிலுள்ள, எதுவும் இயலாத பிள்ளைகளின் கல்வியை அழிக்க விரும்புகிறதா?” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.