இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் நூறு நாட்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இரு நாட்டுக்கும் இடையிலான போர் ஆரம்பமானது.
இந்த நூறு நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் போர் சூழலில் இலட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் “சேவ் தி சில்ரன்” (Save the children) அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேசன் லீ தெரிவிக்கையில்,
‘காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
காஸாவில் வசித்து வரும் 11 இலட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்களது பெற்றோரை இழந்து சொல்லொணாக் கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். காஸாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்” என தெரிவித்தார்.
இந்நிலையில், ஐ.நாவின் நீதிமன்றத்தில் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையான காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கான இடைக்காலத் தடை என்பது ஹமாஸுக்கு ஆதரவாக மாறக் கூடும் என இஸ்ரேல் வாதிட்டுள்ளது.
இதேவேளை போர் நிறைவடைவதற்கான எந்த அறிகுறியும் இதுவரையில் தென்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.