காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் மற்றும் அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க். ஏ.பீ.எம்.அலியார் (றியாதி) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைகழக ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.ஐ.பௌசுல் கரீமா கலந்து கொண்டார்.
காத்தான்குடி பிரதேசப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 723 மாணவர்களும், அவர்களின் அடைவிற்காக உழைத்த 44 ஆசிரியர்களும் மற்றும் 27 அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளையின் தலைவர் மௌலவி ஏ.எம்.ஹாறூன் (றஷாதி), காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி), அக் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஸெயினுல் ஆப்தீன் (மதனி), கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலை, அல்குர்ஆன் மனனப் பாடசாலை மற்றும் ஆண் மாணவர்களுக்கான இரவு நேர கற்கைநெறி ஆகியவர்ற்றின் மாணவ மாணவிகள், ஆசிரியரகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.கே.மொஹமட் ஜாபிர் (நழீமி) அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.