76 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் எம் தேசத்தின் மையப் பிரச்சினைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அதில் எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
சுதந்திரத்தின் அருமை பெருமைகளை ஆண்டுதோறும் நினைவுபடுத்துகின்றோம். எமது நாடு அதன் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பல சாதனைகளை புரிந்துள்ளது.
இலவச கல்வி, இலவச சுகாதார சேவை, சர்வசன வாக்குரிமை, ஜனநாயக ஆட்சி முறை, அணிசேரா கொள்கை. அதிகார பரவலாக்கம் என சமூக தளத்தில் பல முற்போக்கான அம்சங்கள் சுதந்திரத்தால் சாத்தியமாகியுள்ளது.
எனினும் பிரச்சினைக்குரிய விவகாரங்கள் பெருமைக்குரிய விவகாரங்களை பின்னோக்கி தள்ளுகின்றன. தோல்வியடைந்த நாடுகளுக்கு முன்னுதாரணமாக கூறப்படும் நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறிவிட்டது.
புத்திஜீவிகளின் வெளியேற்றமும் முதலீட்டாளர்களின் அச்சமும் கூர்மைப்படுத்தப்படும் இனவாதமும் சட்ட, நிர்வாகத்துறைகளில் நடைபெறும் அசமந்தப் போக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை தகர்த்துக் கொண்டிருக்கிறது.
சுயநலத்தையும் சுரண்டலையும் இலக்காக கொண்ட வல்லரசுகளின் பிடியிலேயே நமது நாடு இன்னும் சிக்கியிருக்கிறது. பதவி மோகத்தையும் ஏமாற்றுதல்களையும் பண்பாகக் கொண்டவர்களே தேசிய அரசியலை மாறி மாறி கையாளுகின்றனர்.
நமது நாட்டின் சிவில் சமூகம் பலவீனம் அடைந்து காணப்படுகின்றது. எமது மக்கள் அறியாமை, வறுமை, பினி என பல சமூக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எமது மக்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டால் எமது சிவில் சமூகம் பலம் பெற்றால் எமது நாடு பாதுகாக்கப்படும் இனிவரும் சுதந்திர தினங்களாவது அர்த்தமுள்ளதாக மாறும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.