ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுகம் மற்றும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ நூல் வெளியீடு தொடர்பில் தமிழ்நாடு ரஹ்மத் அறக் கட்டளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:
‘ரஹ்மத் அறக்கட்டளை’ என்பது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு, மார்க்க அறப்பணிகளை ஆற்றிவரும், லாபநோக்கமற்ற ஒரு நிறுவனமாகும்.
பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 மாணவிகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளியை முத்துப் பேட்டையில் நடத்திவரும் ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய மூலாதார நூல்களை மொழிபெயர்த்துத் தமிழில் வழங்கும் இலட்சியத்தோடு 1993ம் ஆண்டு, சென்னையில் நிறுவியதுதான் ‘ரஹ்மத் பதிப்பகம்’
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழகத்தின் மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு, எண்ணற்ற இஸ்லாமிய மூலாதார நூல்களை தமிழில் மொழி பெயர்த்துத் தரும் மகத்தான மார்க்கப் பணியை ரஹ்மத் பதிப்பகம்
ஆற்றி வருகிறது.
ரஹ்மத் அறக்கட்டளையின் ஓர் அங்கமாகிய, ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடுகள், அச்சு வடிவிலும் இணையத்தளத்தினூடாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்களைச் சென்றடைந்துள்ளன.
இறை வசனங்கள் அடங்கிய புனித அருள்மறையாம் திருக்குர் ஆனின் மொழிபெயர்ப்பு(தர்ஜுமா), உலகம் போற்றும் தப்ஸீர் இப்னு கசீர்- 10 பாகங்கள், ஸஹீஹுல் புகாரி-7 பாகங்கள், ஸஹீஹுல் முஸ்லிம்-6 பாகங்கள், மற்றும் திர்மிதீ-5 பாகங்கள், நஸாயீ-6 பாகங்கள், அபூ தாவூத்-5 பாகங்கள், இப்னு மாஜா-5 பாகங்கள், ஷமாயீல் திர்மிதீ- 1 பாகம் என மொத்தம் 50.000யிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட 35 பாகங்களைக் கொண்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துத் தந்து, ஒரு இமாலய சாதனையையே நிகழ்த்தியுள்ளது ரஹ்மத் பதிப்பகம்.
அத்துடன் இஸ்லாமிய வரலாறு-6 பாகங்கள், எம் மெருமான் நபி(ஸல்)அவர்களது வாழ்க்கை வரலாறு, கலீஃபாக்களின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான்(ரலி), அலி)ரலி) என மொத்தம் 11 பாகங்களும் ரஹ்மத் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களை மையமாகக் கொண்டு Study of Islam எனும் கருப் பொருளில் மார்க்கக் கல்வியுடன் சேர்ந்த உலகக் கல்வி என்ற நோக்கிலேயே ரஹ்மத் அறக்கட்டளையின் இந்த மார்க்கப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
ஹதீஸ் நூல்களைப் பொறுத்த அளவில் ‘ஸிஹாஹ் சித்தா’ என அழைக்கப்பெறும் அங்கீகரிக்கப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கும் பணி, வல்ல இறையருளால் நிறைவடைந்துள்ளது.
அந்தப் பணி நிறைவின் மகிழ்வினை, ரஹ்மத் பதிப்பக வெளியீடுகளுக்கு அதிக அளவு ஆதரவு தந்து வரும் இலங்கை முஸ்லிம் பெருமக்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும், சமீபத்தில், மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்த ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடு தொடர்பாகவும்.
எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வெள்ளிக் கிழமை, ‘அஸர்’ தொழுகைக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு, கொழும்பு, ஸாஹிராக் கல்லூரியின் வரலாற்றுப் பெருமை மிகு, அப்துல் கபூர் மண்டப, விழா அரங்கில் ஒரு ஒன்று கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஜாமியா நளீமியா பீடத்தின் முதல்வர் அகார் முஹம்மது அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்வில், ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா அவர்களோடு, தமிழகத்தைச் சேர்ந்த உலமாக்களும், இலங்கை உலமாக்கள் பலரும் கலந்துசிறப்பிக்கவுள்ளார்கள்.
சன்மார்க்க, அறிவு , சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
ரஹ்மத் அறக்கட்டளையின் வெளியீடுகளில் ஒன்றான ‘ஸஹீஹுல் முஸ்லிம்’ நிறைவுப் பாகம், ஏற்கனவே மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ.எம். சுக்ரி அவர்களது தலைமையில் 2006ஆம் ஆண்டு கொழும்பு பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது, இந்த வேளையில் நினைவு கூரத்தக்கது.
கொழும்பு, ஸாஹிராக் கல்லூரி நிகழ்வைத் தொடர்ந்து 3ம் திகதி ஞாயிறு காலை 9.30க்கு தென்கிழக்குப் பல்கலைக் கழக விழா அரங்கிலும் இவ்விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.