இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபையால் விஷேட நிகழ்வொன்று நேற்று கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது.
தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் கிராஅத் ஓதப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனையடுத்து பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் பிரதான உரை நிகழ்த்தினார்.
மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தேசிய நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பினை பறைசாற்றும் வகையில் பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நலன் அமைப்புகள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.