1983 முதலே மர்ஹூம் அலவி மௌலானாவுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு முயற்சி எடுத்தோம். அது கைகூடவில்லை. இப்போது நீங்கள் அந்த முயற்சியைத் தொடருகிறீர்கள். இந்த முயற்சி உங்களுக்கு சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் என அண்மையில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபக அங்கத்தவர்களான அஸ்ஸெய்யித் ஸாலிம் ரிபாய் மௌலானா, அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, அஷ். அப்துல் முஜீப் ஆகியோர் இப்ராஹிம் மௌலவி அவர்களைத் தரிசிக்கச் சென்ற வேளையில் தெரிவித்ததாக இஸ்லாமிய ஐக்கியப் பேரவை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூக அமைப்புக்களிடம் இணக்கப்பாட்டுக்கும் சமூக அபிவிருத்திக்கும் இறுதிவரை பாடுபட்ட மௌலவி இப்ராஹிம் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகக் கடமையாற்றிய இப்ராஹிம் மௌலவி அவர்கள், அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடியாகவும், சிங்கள மொழியிலான உலமாக்களை வளர்ப்பதற்கான கல்வி நிறுவனத்தின் முன்னோடியாகவும், பெண்களுக்கான முன்மாதிரியான கல்வி நிலையங்களின் முன்னோடியாகவும் சமூகத்துக்குத் தொண்டாற்றினார்.
கபூரியாவில் அல் ஆலிம் பட்டத்தைப் பெற்று அரபு ஆசிரியராக அரச சேவையில் இணைந்தார்.
சவூதி அரேபியாவில் உயர்கல்வியை முடித்து நாடு திரும்பிய பின் 1989 இல் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 1992 வரை பொறுப்பில் இருந்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அதி முக்கிய பிரமுகராக இருந்து உலமாக்களுக்கு சேவை ஆற்றியதோடு மதீனா உட்பட பல சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை முஸ்லிம் மாணவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
ஜாமிஆ நளீமியாவின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததோடு நளீமியாவின் முதலாவது பாடத்திட்டத்தினை வரைவதிலும் பிரதான பங்கு வகித்தார்.
முஸ்லிம் சமூக அமைப்புக்களை ஐக்கியப்படுத்துகின்ற பல முயற்சிகளை ஏனைய உலமாக்களோடும் புத்திஜீவிகளோடும் இணைந்து மேற்கொண்ட மௌலவி இப்ராஹிம், மஸ்ஊத் ஆலிம் ரஹ், மௌலவி ரியாழ் ரஹ் போன்றவர்களுடன் இணைந்து இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உலமாக்களிடையேயான ஐக்கியத்துக்காக நிறுவினார்.
பின்னர் பல சமூக முக்கியஸ்தர்களுடன் இணைந்து முஸ்லிம் ச5கத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து ஐக்கியப் பேரவை ஒன்றை உருவாக்கப் பாடுபட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக அவர் எடுத்த முயற்சிகளைத் தொடர்வது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாகும் என இஸ்லாமிய ஐக்கியப் பேரவை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.