இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான ரயில் மார்க்கங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளைக்கான விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
அதேநேரம், இன்றைய தினமும், நாளைமறுதினமும், இரவு 7.30க்கு மற்றுமொரு விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளை மறுதினம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி காலை 7.45க்கு விசேட ரயில் ஒன்று புறப்படவுள்ளது.
இன்றும் நாளை மறுதினமும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி மாலை 5.20க்கு புறப்படவுள்ளது.
இதேவேளை, நீண்ட வார இறுதியில் அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே வடக்கு மார்க்கத்தில் பல ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையில் மாலை 4.30க்கு ரயில் சேவை ஒன்று இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.