ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் நான்காவது தடவையாகவும் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான மூன்று நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் 24,25,26 ஆம் திகதிகளில் காலை 10.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏப்ரல் மாதமாகும் போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கதையாடல்கள் களைகட்டி ஓய்ந்து வரும் நிலையில் இந்த வருடம் ஏப்ரலிலும் தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பிலான மூன்றாவது பாராளுமன்ற விவாதம் சன்னல் 4 இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியதைத் தொடர்ந்து நடைபெற்றது.
இரண்டாவது விவாதம் விசாரணைக் குழுவின் அறிக்கையை விவாதிப்பதற்காக 2021 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
முதலாவது விவாதம் தாக்குதல் நடந்த வருடத்தில் மே மாதம் நடைபெற்றது.
மூன்று நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தனக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு 45 மில்லியன் ரூபா செலவாகியது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அப்போது தெரிவித்திருந்ததற்கமைய இந்த மூன்று நாள் விவாதத்துக்கும் நாலரைக் கோடி ரூபா பொதுமக்களின் பணம் செலவிடப்படும் என மதிப்பிடப்படுகிறது.