கடந்த 7 மாத காலமாக மோதல்கள் இடம்பெற்று வரும் காஸா யுத்த நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகளின் விடுதலை என்பன குறித்து சமாதான உடன்படிக்கையொன்றை எட்டும் முகமாக ஹமாஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை எகிப்திய கெய்ரோ நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமிடையில் உடன்படிக்கையொன்றை எட்டும் முகமாக இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எகிப்து, கட்டார், அமெரிக்கா என்பன மத்தியஸ்தம் வகித்து வருகின்றன
இந்நிலையில் தற்போது மேற்படி போரை நிறுத்துவதற்கு புதிய அழுத்தமொன்று பிரயோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் காஸா விவகாரம் குறித்து ஆராய சவூதி சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா பிராந்தியத்திலான மோதல்கள் ஆரம்பமானதற்கு பிற்பாடு அவர் அந்தப் பிராந்தியத்துக்கு விஜயம் செய்வது இது ஏழாவது தடவையாகும்.
நேற்று திங்கட்கிழமை சவூதி அரேபியா சென்று பேச்சு வார்த்தைகளை நடத்திய அவர் இந்த வார இறுதியில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்தது. கெய்ரோவில் ஆரம்பமான பேச்சுவார்த்தைகளில் கட்டாரும் பங்கேற்றுள்ளது.
குவைத், சவூதி அரேபியா, கட்டார். ஓமான், பஹ்ரெயின் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளடங்கலாக நாடு களை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு சபையின் அமைச்சர்களின் கூட்டத்தில் பிளிங்கன் நேற்று கலந்து கொண்டு காஸா விலான மனிதாபிமான நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.
ஹமாஸ் குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில்,
அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உடன்படிக்கை குறித்து பிரதான பிரச்சினைகள் எதுவும் தமது குழுவினருக்கு இல்லை எனவும் இஸ்ரேலால் புதிதாக முட்டுக்கட்டைகள் போடப்படாத வரை சூழ்நிலை சுமுகமாக உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் ரபா நகரில் நகரில் இஸ்ரேல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வரை நடத்திய தாக்குதல்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.