13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாணவர்களில் 3.7% பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறார்கள் பெரும்பாலும் இ-சிகரெட்டைப் பயன்படுத்திய பின்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
இ-சிகரெட்டுக்கு அடிமையாகும் இவர்கள் மிக விரைவாக சிகரெட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர் என நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.