மக்கள் கருத்து கணிப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையை தவிர்த்து, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான மக்கள் கருத்து கணிப்பை நடாத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பல சட்டமூலங்களை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளமையானது, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமானதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதுடன், புதிய ஜனாதிபதி அந்த திகதியில் பதவி பிரமாணம் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.
இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.