ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று
மல்வத்து மகா மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது ”நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7000 – 17000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன எனவும் அவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி 2025 ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.