

கடந்த காலங்களில் நாங்கள் ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். ஆனாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் குருநாகல் போன்ற இடங்களில் ஏனைய சமூகங்களுடனான நல்லுறவு காரணமாக பாதிப்புகள் குறைவாக இருந்தது. அதன் மூலம் நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் இனரீதியான சிந்தனை, இனரீதியான செயற்பாடுகள் கிடையாது.
என்னைச் சந்திக்க வரும் எந்தவொரு நபரின் இன, மத அடையாளங்களையும் நான் கவனிப்பது கிடையாது. என்னை நாடிவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை மட்டுமே என் கடமையாகக் கருதுகின்றேன்.
ஆகவே தேவையுள்ள எந்தவொரு நபரும் என்னை எந்தநேரத்திலும் தேடி வரலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை என் சந்தோசமாக நான் கருதுகின்றேன்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை சுய திருப்தியை விட இறை திருப்தியை முன்னிட்டு செயற்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் போது எமது செயற்பாடுகள் அனைத்தும் இறை திருப்தியை முன்னிட்டதாக அமையும். நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படும்போது வர்த்தகமும் கூட ஒரு இறை திருப்தியைத் தரும் செயற்பாடாக அமையும்.
குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரை எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மாவட்டமாகும். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் துறை ஊடாக பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
சுற்றுலாத்துறை ஊடாக பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும். வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
இன்வெஸ்டிங் வயம்ப என்றொரு திட்டத்தை அதற்காக முன்மொழிந்துள்ளோம். குருநாகல் நகரை ஒரு ஹெல்த் சிட்டியாக மாற்றும் எண்ணக்கரு ஒன்றும் உள்ளது.
அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம். குளியாப்பிட்டிய நகரை ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
இவ்வாறாக வடமேல் மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
இவற்றின் ஊடாக உரிய பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டியது இப்பிரதேச மக்களின் பொறுப்பாகும். புதிய முதலீட்டுத் திட்டங்களில் உரிய பங்களிப்பைச்செய்ய வேண்டியது இங்குள்ள வர்த்தகர்களின் பொறுப்பாகும்.
அதிலும் தனி வர்த்தக முயற்சிகளை விட காலமாற்றத்துக்கு இசைவாக கூட்டு வர்த்தக முயற்சிகளாக மாற்றி அமைக்கும் போது அதன் வெற்றியும், பலமும் அதிகமாக இருக்கும் அதேபோன்று குருநாகல் மாவட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
அதற்கான அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏனைய விடயங்களால் சாதிக்க முடியாத பல விடயங்களை அரசியல் பிரதிநிதித்துவம் மூலமாக சாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்.
