தெவட்டகஹ தர்கா ஷரீபுக்கு நடந்தது போல இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற எந்த அமைப்பைப் பாதிக்கும் வகையில் நடந்தாலும் பேரவை தலையிடும் என மே 21 ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் விஷேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தெவட்டகஹ தர்கா ஷரீபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை தலையிட வேண்டும் என பேரவையின் அங்கத்துவ அமைப்பான அஸ்ஸுன்னா ட்ரஸ்டின் தலைவர் அல்ஹாஜ் அல்ஆலிம் இஹ்ஸான் இக்பால் காதிரி அவர்கள் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான யாப்பு உருவாக்கக் குழுவின் தலைவரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கௌரவ எம்எம் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேரவையின் அங்கத்துவ அமைப்புக்களான அஸ்ஸுன்னா ட்ரஸ்ட், முஹப்பத் தேசிய சமாதானக் கவுன்சில், ஸலாமா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவை, ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி, தேசிய சூறா கவுன்சில் தலைவர்கள் உட்பட பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதுபோன்ற விவகாரங்கள் இனி எந்த அங்கத்துவ அமைப்புக்கு நடந்தாலும் முதலில் தமது நிர்வாக மட்டத்தில் அவர்கள் அதனைக் கலந்துரையாட வேண்டும் எனவும் தாம் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டரீதியான அலகில் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் யாப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினரான சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூப் மௌலானா வழங்கிய வழிகாட்டலை சபை ஏற்றுக் கொண்டது.
தெவட்டகஹ பள்ளிவாசல் மற்றும் தர்காஷரீப் விவகாரத்தைக் கையாண்டது போல இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற ஏனைய 37 அமைப்புக்கள் விவகாரத்திலும் தலையிடுவதற்கு பேரவை முன்வர வேண்டும் என சபை விடுத்த வேண்டுகோளையும் பேரவை ஏற்றுக் கொண்டது.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவை அங்கத்துவ அமைப்புக்களுக்கான இருதரப்பு மற்றும் பல்தரப்பு உரையாடல்களை மேற்கொள்வதற்கான பொறிமுறையாக அமைய வேண்டும் என பேரவையின் நடப்புத் தலைவர் அஸ்ஸெய்யித் ஸாலிம் ரிபாய் மௌலானா முன்வைத்த யோசனையையும் சபை தீர்மானமாக ஏற்றுக் கொண்டது.