ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, எனினும், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிக்கேய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது.
ஹனியேவின் மரணம் “உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை ஹனியேவின் கொலை குறித்த செய்திகள் வெளியாகி வருகின்ற சூழலில், உலக நாடுகள் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
”சம்பவத்திற்கான” காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் “விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று ஈரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் நாசர் கானானி
”இஸ்மாயில் ஹனியாவின் இரத்தம் ஒருபோதும் வீணாகாது. ஹனியாவின் தியாகம் தெஹ்ரான், பலஸ்தீனம் மற்றும் எதிர்ப்பிற்கு இடையிலான ஆழமான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பை வலுப்படுத்தும்.

“ஹனியாவின் கொலைக்குப் பிறகு, போர் நிலைமை தீவிரமடைகிறது.ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழா மற்றும் மூத்த ஈரானிய அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டதால் இந்த சம்பவம் முக்கியமானது.”புதிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதும் முக்கியமானது.”
ஹமாஸ் தரப்பு
”பலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
”இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என என்று முசா அபு மர்சூக் கூறியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பலஸ்தீன அதிபர்
“ஹனியே கொல்லப்பட்டது ஒரு கோழைத்தனமான செயல், அபாயகரமான முன்னேற்றம்,” என்று பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு ஊடகமான வாஃபாவில் வெளியான அவரின் அறிக்கையில், அவர் பலஸ்தீனியர்கள் அனைவரும், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஒன்றிணைந்து, பொறுமையாக, திடமாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
கண்டனம் தெரிவித்த ரஷ்யா, துருக்கி
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசியல் கொலை என்று கூறியதாக அரசு ஊடகமான ரியா அறிவித்துள்ளது.
அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மிக்கைல் போக்டனோவ், இந்த கொலை மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்கு தன்னுடைய கண்டன குரலை பதிவு செய்துள்ளது. “தெஹ்ரானில் நடைபெற்ற வெட்கக்கேடான கொலை இது,” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “இந்த கொலை, காஸாவில் நிலவி வரும் போரை பிராந்திய அளவில் பரப்புவதை இலக்காக கொண்டுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைவர் லாயிட் ஆஸ்டின்
‘போர் தவிர்க்க முடியாததது, இராஜதந்திரத்திற்கு எப்போதும் இடமும் வாய்ப்பும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அங்குள்ள பதற்றத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதை உறுதிசெய்ய உழைத்து வருகிறோம்.
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது அல்-ஹிந்தி,
“இந்த படுகொலை குறிப்பாக பலஸ்தீனிய எதிர்ப்பு மற்றும் ஹமாஸை மட்டும் குறிவைக்கவில்லை, ஆனால் ஈரானையும் குறிவைக்கிறது. இஸ்ரேல் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்றார்.