காசா மீது தீவிர போரை தொடங்கி 250 நாட்களுக்கும் மேலாகியுள்ளன நிலையில், இந்த போரில் இஸ்ரேல் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஹமாஸ்அமைப்பானது கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி.
ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.
போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும்.
அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
பசி, தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார்.
“ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார்.
போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
ஆனால் உண்மையான நெருக்கடி இது அல்ல.. ஹமாஸ் மீதான தாக்குதலை தொடங்கிய பின்னர், இஸ்ரேலின் வடக்குப்பகுதி ஹிஸ்புல்லா படைகளால் தாக்கப்பட்டது. பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும், அதை தொடர்ச்சியாக நடத்த முடியவில்லை. எனவே வடக்கு இஸ்ரேலிலிருந்து சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர்.
ஹமாஸ் மீதான போர் நிறுத்தப்படும் வரை எங்கள் தாக்குதல் ஓயாது என ஹிஸ்புல்லா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.
எனவே 60,000 இஸ்ரேலியர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடத்திற்கு நெதன்யாகு அரசால் போக சொல்ல முடியாது.
அதேபோல மற்றொரு சிக்கல் ஈரான். இஸ்ரேல் ஹமாஸுடனான போரை தொடங்கும்போதே, ஹமாஸையும் தாக்குவது, அதன் கூட்டாளிகளையும் தாக்குவது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கியது.
அப்படித்தான் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் மூத்த ராணுவ ஜெனரல்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான் மூர்க்கமான தாக்குதலை தொடுத்தது. இதனை இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த தாக்குதல் தொடர்ந்தால் கடந்த 1973லிருந்து இஸ்ரேல் கட்டமைத்து வைத்திருக்கும் அயன்டோம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் தவிடுபொடியாகிவிடும். எனவே இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு பேக் ஃபயராக மாறிவிட்டது.
அதேபோல அரபு நாடுகளுடனான இயல்பான உறவு இந்த போரின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் ஒரு புரிதல் ஒப்பந்தத்தை இஸ்ரேல் போட்டிருந்தது.
இது மேலும் விரிவடைந்திருந்தால் இஸ்ரேலின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும். ஆனால் போர் இதனை சொதப்பிவிட்டது. இப்படியாக இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்திருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளனர்.