கொழும்பில் நடைபெற்ற அரசியல் கட்சியொன்றின் பொது மக்கள் சந்திப்பின் போது மேடை ஏறியமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி T.K . அஸூர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் நோக்கில் தான் இப்பதவியை இராஜினாமா செய்வதாக தனது இராஜினாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது.
தேசிய ஷூரா சபையின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி) பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் இதனை அறிவித்துள்ளார்.
தேசிய ஷூரா கவுன்சில் என்பது பல முஸ்லிம் அமைப்புக்களையும் தனி நபர்களையும் உள்ளடக்கிய ஒரு ஆலோசனை அமைப்பாகும், இது இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை செயலூக்கத்துடன் எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.
தேசிய ஷூரா கவுன்சில் (NSC) எடுக்கும் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் அதன் உறுப்பினர்களுடனும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களுடனும் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் எடுக்கப்படுகின்றன.
தேசிய சூரா சபை எந்த வித நேரடி அரசியலிலும் பங்கேற்பதில்லை என்பதன் அடிப்படையிலேயே சட்டத்தரணி அஸூரின் இந்த இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.