அண்மையில் இந்தியாவில் திரையிடப்பட்டுள்ள ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) என்ற திரைப்படம் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் வளைகுடா நாடுகளிலும் பிழையான பார்வையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் பாரியளவில் எழுந்துள்ளன.
இந் நிலையில் இத்திரைப்படம் வெற்றிகரமான முறையில் இப்பொழுது இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.
பல இலட்சக்கணக்கான தெற்காசிய பணியாளர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பணியாளர்கள் கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாடுகளுக்கு வந்து தம்முடைய வாழ்வாதாரத்தை பெற்று வருகின்ற நிலையில், தம்முடைய குடும்ப வருமானத்தை, பிள்ளைகளுடைய எதிர்காலத்தை, சிறப்பாக அமைத்து வருகின்ற நிலையில், அங்கு இடம்பெற்றதாக கருதப்படுகின்ற ஒரு சில சம்பவங்களை மையமாக வைத்து அங்கு நடைமுறையில் இருக்கின்ற ‘ஸ்பொன்ஸர்சிப்’ (கஃபீல்) என்ற நடைமுறையின் காரணமாக இவ்வாறானதொரு அநீதியான சூழ்நிலை இருப்பதாக சுட்டிக்காட்டும் வகையில் இத்திரைப்படத்தின் கதை இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இத் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக படத்தின் பிரதான காதாபாத்திரமாக நடித்துள்ள ஓமான் நாட்டைச் சேர்ந்த நடிகரான தாலிப் அல் பலுஷி சவூதி அரேபியாவுக்குள் நுழைய முற்றாக தடுக்கப்பட்டிருப்பதோடு, குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் திரையிடப்படுவதும், ஏனையோர் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்தளவு தூரம் இத்திரைப்படம் அந்நாடுகளில் பொதுத்தளங்களிலும் அரசியல் மட்டங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புலனாகிறது.
இனி ஆடுஜீவிதம் பற்றிய ஒரு சுருக்கம்…
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதி கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ள திரைப்படமே ‘ஆடுஜீவிதம்’ ஆகும்.
நடிகர் பிரித்விராஜ் இந்தப் படத்தில் சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் சிக்கித் தவித்து தப்பித்து வீடு திரும்பிய நஜீப் எனும் மலையாளியை தனது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
பென்யமின் எழுதிய மிகப்பெரிய நாவலின் ஹைலைட்ஸ்களை மட்டுமே கொண்டு ஒரு படமாக இயக்குனர் பிளஸ்ஸி இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.
5 மில்லியன் அமெரிக்க டொலர் இத்திரைப்படத்தின் தயாரிப்புக்காக செலவிடப்பட்டுள்ளதோடு இதுவரை வருமானமாக 67 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜோர்தானின் பாலைவனமொன்றில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே தமிழ் மற்றும் மலையாளத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கேரளாவில் இருந்து நிறைமாத கர்ப்பிணியை வீட்டில் விட்டுவிட்டு சம்பாதிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் நஜீப், விமானத்திலிருந்து இறங்கியதும் அங்கிருந்து ஒரு வாகனத்தின் மூலம் பாலைவனத்துக்கு கொண்டு சென்று ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு அனுப்பப்படுகிறார்.
சரியாக சோறு, தண்ணீர் எதுவும் கொடுக்கப்படாமல், ஆடுகளை மேய்க்கவும் அவற்றில் இருந்து பாலை கறந்து கொடுக்கவும், வேலைக்கு வைத்த ஆட்கள் குறிப்பிட்டு சொல்லும் ஆட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இப்படியான வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், உணவு மற்றும் போதிய குடிநீர் இல்லாமல் குளிக்க முடியாமல், பல மாதங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ளும் நஜீப், எப்படியாவது உயிர் பிழைத்து தனது சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வெளிநாட்டினர் ஒருத்தருடன் அங்கிருந்து தப்பித்து செல்ல நினைப்பது தான் மீதி கதை.
எவ்வாறாயினும் சவூதி அரேபியாவுக்கு பணிக்குச் சென்ற இந்தியரான நஜீப் முஹம்மதுவின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘ஆடுஜீவிதம்’ படம் உருவாக்கப்ட்டுள்ளது.
இத்திரைப்படம் சவூதி அரேபியாவின் பிம்பத்தை சிதைக்கும் முயற்சி என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,சவூதியில் உள்ள இந்தியர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.