இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் செய்த், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சபாநாயகர் கேட்டறிந்துகொண்டார்.
பலஸ்தீனம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் மனிதநேய பிரச்சினைகள் குறித்து பலஸ்தீனத் தூதுவர் சபாநாயகருக்கு விளக்கிக் கூறினார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் அனைத்து இலங்கையர்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்றமை குறித்து தூதுவர் சபாநாயகருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி வெற்றி பெறுவதன் மூலம் தனியார் முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி சுஹைர் வழங்கிய பங்களிப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.