நாங்கள் பதவிக்கு வந்தால் கண்டி பெரஹர உள்ளிட்ட பெரஹராக்களை நிறுத்தப் போவதாக சிங்கள சமூகத்தில் பிரச்சாரம் நடக்கிறது. மதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் பக்தியை எமக்கெதிராகத் திருப்ப நினைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார கூறினார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (21) உலமா சபைத் தலைவருடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும் இந்தச் சந்திப்பின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் அரசியலைப் பற்றியும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் விளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூரமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஸ்வர் ஆகியோர் உட்பட உயர் பீட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இந்தச் சந்திப்பில் இணைந்திருந்தார்.
இந்த சந்திப்பின்போது சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பின் பிரதியொன்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரால் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.