புத்தளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று (13) காலை இரத்த தான முகாமொன்று இடம் பெற்றது.
ரம்ய லங்கா நிறுவனம், ஜமாஅத்தே இஸ்லாமி, புத்தளம் பிரதேச செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்த இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதேச செயலக பிரதிப் பணிப்பாளர், பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர். அஷ்ஷெய்க்.முஜீப் ஸாலிஹ், ரம்யா லங்கா நிறைவேற்று அதிகாரி டி.எம். அலி சப்ரி, மருத்துவ அதிகாரி வைஸ்னவன் பத்மநாதன், பொது சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி நுவன் ஜயசிங்க, சிலாபம் மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கான இரத்த வங்கியின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர,
இரத்த தானம் என்பது ஒரு புண்ணிய காரியம். அதனை சாதாரண விடயமாகக் கருதமுடியாது. பௌத்த தர்மத்தின் பிரகாரம் முன்னைய ஆத்மாவில் நன்மை செய்தவர்கள் தான் இவ்வாறான அறப்பணிகளில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கிறது.
இரண்டாவது தடவையாக பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்புண்ணிய நிகழ்வுக்கு ரம்ய லங்கா நிறுவனம் வழங்கும் பேராதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.
மேலும் ரம்ய லங்கா சார்பில் உரையாற்றிய அலி சப்ரி,
நாடு பூராகவும் தமது நிறுவனம் இவ்வாறான பணிகளில் ஈடுபட்டு வருவதோடு தேசிய இரத்த வங்கிக்கு ரம்ய லங்கா மூலம் வருடாந்தம் ஒரு தொகை இரத்தத்தைப் பெற்று கொடுப்பதாகவும் எதிர்காலத்தில் இரத்த வங்கியோடு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அவர் தெரவித்தார்.
இந்நிகழ்வில் பொதுச்சுகாதார அதிரகரி நுவன் ஜயசிங்கவும் உரையாற்றியிருந்தார்.