பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளது.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட உள்ளார்.
நாளை இரவு 8 மணி அளவில் இடைக்கால அரசு பொறுப்பேற்கும் என பங்களாதேஷ இராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இன்று அறிவித்துள்ளார்.
பங்களாதேஷில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து பங்களாதேஷ பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அரசில் இராணுவத்தினர் இடம்பெற கூடாது, எந்த கட்சியின் பிரதிநிதியும் இருக்கக் கூடாது, அரசியல் மற்றும் இராணுவத்தை சாராத பொதுமக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அரசில் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 2006ல் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டுள்ளார். நாளை (ஆகஸ்ட் 8) இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் கான் பொறுப்பேற்க உள்ளார்.