பிரிட்டனைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.
சஃபோல்கில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் அந்த மூதாட்டி, தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சாகசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
பெய்லி, கிட்டத்தட்ட 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து குதித்து இந்தச் சாகசத்தைப் புரிந்ததாகவும் இந்தச் சாதனை முயற்சியின் மூலம் 30,000 பவுன்ஸ் திரட்ட திட்டமிட்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட 14,000 பவுன்ஸ் (S$24,000) திரட்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இதன்மூலம், 2017ஆம் ஆண்டு மே மாதம், 101 வயது முதியவர் வெர்டுன் ஹேஸ், நிகழ்த்திய சாதனையை முறியடித்து அதிக வயதில் வான்சாகசத்தில் ஈடுபட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் எனும் பெருமையைத் பெய்லி பெற்றார் என ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
வயதானாலும் முயற்சி செய்தால், எதையும் சாதித்து காட்டலாம் என நிரூபித்து காட்டிய 102 வயது மூதாட்டி கூறியதாவது,
ஸ்கை டைவிங் செய்யும் போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். நான் மிகவும் வேகமாக பயணிப்பது போல் தோன்றியது. எனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன்.
நான் சுறுசுறுப்பாக செயல்படுவற்கு காரணம் என்ன என்றும், முதுமையின் ரகசியம் என்ன என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர். நிச்சயமாக இது அதிர்ஷ்டம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்றார்.