இளைஞர்களுக்கு வாய்ப்பு: இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன்; விக்னேஷ்வரன் அறிவிப்பு

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இதில், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள். எமது கட்சியில் உள்ள துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

என்னைப் போல் மற்றைய தமிழ் கட்சிகளில் உள்ள அரசியல் முதிர்ச்சி கொண்டவர்கள் தாம் வழி காட்டியாக நின்று கொண்டு இளைஞர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் விடவேண்டும் எனநான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதற்கு முன்மாதிரியாக நான் எமது தமிழ் மக்கள் கூட்டணியின் பணிகளில் தொடர்கின்ற அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாது இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர்களுக்கு தொடர்ந்தும் துணை நிற்க முடிவுசெய்துள்ளேன்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டிய தருணம் வந்துள்ளது. அதனை ஏற்று தமிழ் மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் இளையோருக்கு தமது ஆதரவினை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில், கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இந்த காலக்கட்டத்தில் என்னால் முடிந்தளவுக்கு பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் எனது மக்களின் பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றி எடுத்துக் கூறியுள்ளேன்.

குறிப்பாக, தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உரிமைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வினை சிங்கள மக்கள் மத்தியில் என்னால் ஏற்படுத்த முடிந்துள்ளதாக நம்புகின்றேன். நில ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு சர்வதேச ரீதியான மாநாடுகள் நடத்தி மற்றும் ஒரு ஆவணப்படம் ஒன்றையும் நான் எனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தேன். என்னால் முடிந்தவரை இதே பாதையில் தமிழ் மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும்  என்றும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...