இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ காசா பகுதியில் வசிக்கும் மக்கள் தான்.
காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் அடுத்துள்ள அல்-மவாசி பகுதியில் அமைந்துள்ள கூடாரங்களைக் குறிவைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக காசாவின் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் ஒவ்வொரு நகரத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மக்கள் அதிகம் வாழும் கான் யூனிஸ் மற்றும் அருகிலுள்ள ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் கடலோரப் பகுதியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவித்து இருந்தது.
அதாவது அந்த பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என அறிவித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த அல்-மவாசி பகுதியில் பலஸ்தீன மக்கள் அதிகம் முகாமிடத் தொடங்கினர்.
இந்தச் சூழலில் தான் அங்கும் தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை இஸ்ரேல் உளவு திடீரென தலைக்கு மேல் பறந்ததாகத் தெரிவிக்கும் பலஸ்தீன மக்கள், திடீரென இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறுகிறார்கள்.
தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இப்போது துரிதமாக நடந்து வருகிறது. முகாமில் சில இடங்களில் சுமார் 9 மீட்டர் அதாவது 30 அடி வரை கூட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் தங்கி இருந்த முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள காசா நிர்வாக அதிகாரிகள், இந்த போரின் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர்.
கூடாரங்கள் முழுமையாகப் பற்றி எரிந்த நிலையில், உடல்களை மீட்பதிலேயே சிரமம் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.
அதேநேரம் இஸ்ரேல் தரப்பு இதற்கு வேறு விதமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
அதாவது கான் யூனிஸில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் மறுப்பு: அதேநேரம் இஸ்ரேலின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த பாதுகாப்பு மண்டலத்தில் தங்கவில்லை என்று கூறியுள்ளது. அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் அதைச் சமாளிக்கவே இந்த காரணங்களைக் கூறுவதாகவும் ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் இருக்கும் பகுதிகளில் இருக்க மாட்டோம் என்று பல முறை கூறிய பிறகும், திட்டமிட்டு இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது என்று ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.