கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இலங்கை இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு இன்று (13) கையளிக்கப்பட்டன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தர் அல்ஹாஜ் ஸுஹைருல் அஸ்மி அவர்களிடம் இந்த பிரதிகள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் என்.நிலூபர் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் முப்தி முர்சி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்னமும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாகவும் விரைவில் முஸ்லிம் சமூகத்திடம் அவை ஒப்படைக்கவுள்ளதாகவும் இதற்கென அரசாங்கம் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் கடந்த மூன்று மாதங்களாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழியிலான புனித அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை (10) விடுவிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் இந்த குர்ஆன்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இதனை விடுவிப்பதற்கான அனுமதியினை திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு,கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சும் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கான அனுமதியினை வழங்கியிருந்தது.